பல விவசாயிகளின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்திருப்பதை அறிந்துகொண்டபோது மகிழ்ச்சியாக உள்ளது என கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மேவானில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தெரிவித்தார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு விவசாயிகளைச் சந்திப்பதற்காக கோபிசெட்டிபாளையம் வந்தார்.
கோபிசெட்டிபாளையம் மேவானி கிராமத்தில் நடந்த இந்நிகழ்வில் மரம்சார்ந்த விவசாயத்தால் தங்கள் வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவசாயிகள் ஜூஹி சாவ்லா அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு நடிகை சாவ்லா செய்தியாளரிடம் பேசியபோது, "நான் இங்கு வந்து விவசாயிகளைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பு இவ்வியக்கத்தின் மூலம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்த எண்ணிக்கை அடிப்படையிலான தகவல்கள்தான் எனக்குத் தெரியும்.
ஆனால், விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகுதான் அவர்களின் வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் நடந்துள்ள ஏராளமான மாற்றங்கள் குறித்து தெரிந்துகொண்டேன். பல தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், மகிழ்ச்சியூட்டும் வகையிலும் இருந்தன.
வறட்சியாலும், குடும்ப சூழல்களாலும் நிலத்தை விற்க முடிவு எடுத்த விவசாயிகள்கூட காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். அவர்களுக்குப் புது நம்பிக்கை கிடைத்துள்ளது. பல விவசாயிகளின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்திருப்பதை அறிந்துகொண்டபோது மகிழ்ச்சியாக உள்ளது.
பொருளாதாரம் மட்டுமின்றி நிலத்தின் மண்வளமும் நன்கு மேம்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய அற்புதமான மாற்றங்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருக்கும் சத்குருவுக்கும், ஈஷா தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
விவசாயிகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்த பிறகு சத்குரு மீதான மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அவர் முன்னெடுத்துள்ள இந்தப் மாபெரும் பணியில் என்னால் ஆன சிறு உதவிகளை ஆரம்பம் முதல் நான் செய்துவருகிறேன். பாலிவுட் துறையில் இருக்கும் என்னுடைய நண்பர்களின் பிறந்த நாள்களின்போது 500, 1000 மரக்கன்றுகளை நடுவதற்கு நிதி அளித்துவருகிறேன்.
காவேரி கூக்குரல் இயக்கம் குறித்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறேன். இது பாலிவுட் வட்டாரத்தில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. நான் என்னுடைய கடந்த பிறந்தநாளின்போது, எனக்கு பிறந்த நாள் பரிசாக மரங்கள் நடுங்கள், வேறு எந்தவிதமான பரிசும் அளிக்க வேண்டாம் என வேண்டுகோள்விடுத்தேன்.
ஆச்சரியப்படும் வகையில், என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் சுமார் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதியுதவி அளித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதன்மூலம், காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி திரட்டும் என்னுடைய இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன்.
நான் தமிழில் இரண்டு படங்கள் நடித்துள்ளேன், தமிழ்நாடு மக்கள் மத ஒற்றுமை மொழி பற்றுள்ளவர்கள் மிகவும் பழமையானவர்கள் ஒழுக்கமானவர்கள் என மிகவும் தென்னிந்திய மக்கள் பிடித்தவர்கள், ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டால் இறந்துவிடுகின்றன.
விவசாயிகள் கூடு பயிர்கள் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்பது இங்கு வந்து பார்த்த பின்புதான் தெரியவந்தது" என்றார். விவசாயி செந்தில்குமார் அவர்களின் தோட்டத்தில் நடந்த இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்