கோயம்புத்தூர்: Youngest Woman To Fly Solo: விமானம் மூலம் உலகைச் சுற்றிவரும் 19 வயது இளம்பெண் இந்திய பயணத்திற்காக கோயம்புத்தூர் வந்துள்ளார். ஜாரா ரூதர்போர்ட், 'இளம் வயதில் உலகை விமானத்தில் தனியாகச் சுற்றிவந்த இளம்பெண்' என்ற சாதனையைப் படைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பெல்ஜியத்திலிருந்து ஷார்க் ஏரோ என்ற சிறிய ரக விமானத்தில் அவரது பயணத்தைத் தொடங்கினார்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, அமெரிக்கா, தென் அமெரிக்கா, கொரியா, இலங்கை நாடுகளுக்கு பயணித்த அவர் தற்போது கோவை விமான நிலையத்திற்கு தற்போது வருகைதந்துள்ளார்.
அவரது பயணத்திற்குப் பொருளாதார உதவிகளை வழங்கிவரும் எல்ஜி நிறுவனம் (ELGI) சார்பில் இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
எரிமலையின் மீதும், பெருங்கடலின் மீதும் பயணம்
இதில் செய்தியாளரைச் சந்தித்த ஜாரா ரூதர்போர்ட், "உலகில் உள்ள 52 நாடுகளை கடந்து இளம் வயது சாதனையாளராவதே எனது இலக்கு. இதன்மூலம் ஐஸ்லாந்தில் எரிமலையின் மீதும், நியுயார்க் நகரத்திலும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஷ்யாவில் காலநிலை போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் பயணம் இனிமையாகவே இருந்தது.
இளம் வயதில் உலகைச் சுற்றிவருவதே எனது இலக்கு. பல பெண்களை ஊக்குவிப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம். இதற்கு முன்பு 30 வயதுடைய அமெரிக்காவின் சேஷ்டா வெயிஸ் என்ற பெண்ணே உலகைச் சுற்றிவந்த இளம்பெண் என்ற சாதனையைப் படைத்தார், அதனை முறியடிக்கும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
சுமார் 30 ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்துள்ளேன். சிறு வயதிலேயே விமானம் ஓட்ட பழகியதால் இளம்வயதில் உலகைச் சுற்றிவருவதற்கு விரும்பினேன். நான் பார்த்தவரை ஐஸ்லாந்து நாட்டில்தான் பாலின பாகுபாடு குறைவாக உள்ளது.
ஆபத்தான நாடுகளின் வழியே பயணம்
சைபீரியா போன்ற ஆளரவமற்ற இடத்தில் சிக்கினால் மீட்புப் பணிக்கு பல மணி நேரம் ஆகலாம் என்பது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வந்துள்ளேன். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள எனக்கு இதுவரை கரோனா தொற்று ஏற்படவில்லை.
வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி பெல்ஜியத்தில் இப்பயணத்தை நிறைவுசெய்கிறேன். சராசரியாக நாள் ஒன்றிற்கு 5 மணி நேரம் பயணிக்கின்றேன். அனைத்து நாடுகளின் மக்களும் ஒத்துழைப்பு அளித்தனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:அஜித்தின் வலிமை ட்ரெய்லர் வெளியீடு!