கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வன்னியன் கோயில் பகுதியில் இரும்பு பட்டறை நடத்திவருபவர் ரவிக்குமார் (38). அவரது மனைவி சரண்யா (35) நேற்று மதியம் கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது காவலர் சீருடையில் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து வந்து தவறாகப் பேசியுள்ளார்.
இதனால் சரண்யா தன் கணவர் ரவிக்குமாருக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்ததையடுத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து ரவிக்குமார், அவரது நண்பர்கள் அத்திப்பாளையம் பகுதிக்கு வந்து அந்த நபரை கோவில்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பிரபாகரன் என்பதும், அவர் பெரியநாயக்கன்பாளைய காவல் துணை கண்காணிப்பாளரின் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணிடம் தவறாகப் பேசிய குற்றத்திற்காக அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.