கோயம்புத்தூர்: 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஏற்பட்ட குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு 24 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வீர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண்
இந்நிகழ்வில் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் வெல்லும் போது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இதே பகுதியில் நினைவுத்தூண் வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”இந்து என்பது வாழ்வியல் முறை. பிற சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிலர் இந்து மதத்தை தவறாக சித்தரிக்கின்றனர். திமுக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் கோயில்கள் இடிக்கப்படும் நிலை உள்ளது. திமுக ஆட்சியில் இரவில் நோட்டீஸ் கொடுத்து காலை கோயில்களை இடிக்கும் சூழல் உள்ளது
கடந்த எட்டு மாத கால திமுக அரசு அனைத்து மதங்களுக்குமான அரசாக இல்லை. அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முழு பலத்தையும் பயன்படுத்தி மறைக்க முயற்சிக்கிறது.

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல்
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் அரசியல் நடைபெறுகிறது.

குடியரசு தின விழா ஊர்தி விவகாரத்தில் பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை முதலமைச்சர் ஸ்டாலின் உச்சரித்தது திமுகவிலிருந்து வந்துள்ள மாற்றம்.
முதலமைச்சர் சொன்னதுபோல மக்கள் இருக்கும் இடங்களுக்கு ஊர்தி வரவில்லை. கோயம்புத்தூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் போது குண்டு வெடிப்பு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களை ஏமாற்றுவதற்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்தனியே போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா கூறிய கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை,
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தமிழ்நாடு பற்றி தெரியாமல் பேசுவதாகவும், கூட்டணியில் காங்கிரஸ் கட்சி செல்போன் எண்கள் போல குறைந்த வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோயம்புத்தூரில் பொருள்களைக் கொடுத்து திமுக வாக்கு சேகரித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது எனவும், அயன் பாக்ஸ், கொலுசு கொடுக்கும் திட்டங்களை திமுகவினர் இன்னும் சில நாள்களில் நிறைவேற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'