கோயம்புத்தூர்: போத்தனூரைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி வேல்முருகனுக்கு அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மகளும், மாற்றுத் திறனாளியான மூன்று வயது மகனும் உள்ளனர்.
வேல்முருகன், பெட்டிக் கடை நடத்தி வந்த நிலையில், கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்துள்ளார். இதனால், தனக்கு உதவிடுமாறு கடந்த ஜூலை 5ஆம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்திருந்தார்.
நெகிழ வைத்த ஆட்சியர்
முன்னதாக அவரது மனு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், வேல்முருகனை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
பின்னர், மாற்றுத் திறனாளி சிறுவனுக்கும் சிறுவனது தந்தைக்கும் மாவட்ட ஆட்சியர் காலணிகள் வழங்கினார். மேலும் அவரது பெண்ணுக்கு மிதிவண்டி, புத்தகப் பை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
கண் கலங்கிய குடும்பத்தினர்
மாற்றுத் திறனாளி குழந்தைக்கு மாவட்ட ஆட்சியரே காலணிகளைப் பொருத்தி, சிறுவனுடன் விளையாடுவதைக் கண்ட கண்ட வேல்முருகன், அவரது மனைவி இருவரும் கண் கலங்கியபடி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், தற்போது வாடகை வீட்டில் தாங்கள் வசித்து வருவதாகவும், தங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் ஆட்சியருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இது குறித்து விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஒற்றைக்காலுடன் 18 ஆண்டுகளாக அரசின் உதவிக்காக அலையும் மாற்றுத்திறனாளி பெண்