நடிகர் சூர்யா நடிப்பில், இன்று(மார்ச் 10ஆம் தேதி) தமிழ்நாட்டில் வெளியானது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள 'உள்ளம் உருகுதையா' பாடலும் இடம்பெற்றுள்ளது.
பாடல் வரிகளை நீக்குக:-
அந்தப் பாடல் வரிகள், தமிழ்க் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும்; இப்பாடலைப் படத்திலிருந்து நீக்க வலியுறுத்தியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி, 'பாடல் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட போதும், இன்று படம் வெளியான பிறகு தான் அதில் முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்தது. எனவே, பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும்.
சட்டப்பூர்வ நடவடிக்கை
படத்தில் நடித்த சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், கடவுள் வாழ்த்து பாடல் எனத் தெரிந்தும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர உள்ளோம். இவ்வழக்கு இந்து கடவுள்களையும், நம்பிக்கைகளையும், இழிவுபடுத்துவோருக்கு ஒரு பாடமாக இருக்கும்' எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, வன்னியர் சங்கமும், பாமகவும் இந்தப் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை வெளியிட்டால் திரையிடும் அனைத்து திரையரங்குகள் முன்பும் போராட்டங்கள் நடத்துவோம் என்று போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட்டால் போராடுவோம் - கரூர் பாமக மாவட்ட செயலாளர்