கோவை வெள்ளளூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுக்கத்அலி (32). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த சதீஷ் என்பவருக்கும் நேற்று (டிச. 13) மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த போத்தனூர் காவல் துறையினர், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்கான பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சவுக்கத் அலி குடிபோதையில் இருந்ததால் அவரது வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு, காலையில் வந்து அபராதம் கட்டிவிட்டு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாலை 6 மணி அளவில் காவல் நிலையத்திலிருந்து வெளியே சென்ற சவுக்கத்அலி, இரவு 8 மணி அளவில் கையில் பெட்ரோலுடன் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து, வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். குடிபோதையில் இருந்த சவுக்கத் அலி, மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.
இதனையடுத்து ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். உடலில் 60 விழுக்காடு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல் நிலைய வளாகத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி: அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த இளைஞர்