நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சிவபெருமாள் (35). கடந்த மூன்றாம் தேதி தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் நின்றபடி வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவரது உடல் உறுப்பானது தானமாகப் பெறப்பட்டது. தற்போது தானமாகப் பெறப்பட்ட சிவபெருமாளின் சிறுநீரக உறுப்பானது அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (34) என்பவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பலமுறை நடைபெற்று வந்தபோதிலும் தானமாகப் பெறப்பட்டு மற்றொருவருக்கு வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். அதே மருத்துவமனையிலிருந்து தானமாகப் பெறப்பட்ட ஒரு உடல்உறுப்பு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மற்றொரு நோயாளிக்கு பொருத்தி சாதனை படைத்தது மருத்துவர்களிடையே மகிழ்ச்சி அடைய செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன், இவ்வாறு தானம் பெறப்பட்ட உறுப்பை இங்கு உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியது இதுவே முதல் முறை என்றும், இதில் வெற்றியும் அடைந்துள்ளது என்றும் மகிழ்ச்சி கொண்டார்.
இந்த அறுவை சிகிச்சையைப் பிரபாகர், காந்தி மோகன், தினகரன் பாபு, மோகன், ரமேஷ், சாந்தா அருள்மொழி, ஜெயசங்கர், நாராயணன் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய குழுவே வெற்றிகரமாகச் செய்துள்ளனர் என்று பெருமிதம்கொண்டார்.