சென்னை: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (21). இவரது வீட்டிற்கு அருகாமையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி, குழந்தைகளை வீட்டில் விட்டு, ஆட்டோ ஓட்டுநர் அவரது மனைவியுடன் மாஸ்டர் திரைப்படம் பார்க்கத் திரையரங்கிற்கு சென்றுள்ளார்.
படம் முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவர்களது 13 வயது மகள் மட்டும் காணாமல் போயுள்ளார். நீண்ட நேரமாக தேடிய போதும் கிடைக்காத சிறுமி, இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
எங்கே சென்றாய் என சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நண்பர்கள் மூலமாக பக்கத்து வீட்டில் வசித்து வரக்கூடிய வினோத் அறிமுகமானார். பின்னர் சிறுமிக்கு வினோத் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்கு தன்னை அழைத்து செல்லாமல் பெற்றோர் விட்டு சென்றதால், மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டுமென வினோத்திடம் கேட்டதாகவும், லேப் டாப்பில் மாஸ்டர் படத்தை காட்டுவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்ற வினோத், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை கர்ப்மாக்கிய இளைஞர் போக்சோவில் கைது!