சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள எஸ்.வி.எம் நகர் சாலையோரம் வயதான மூன்று சகோதரிகள் ஆதரவற்ற நிலையில் பல மாதங்களாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அப்பகுதி மக்கள், தலைமை செயலக காலனி காவலர் அவ்வபோது உணவு வழங்கி வந்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்துவந்த நிலையில் தன்னார்வலர்கள், காவல்துறையினர் உணவு பொருட்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களில் இளைய சகோதரியான பிரபாவதி(57) நடந்து செல்லும்போது காலில் அடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனிருந்த சகோதரிகள் பிரபாவதியின் உடலை அடக்கம் செய்ய அங்கு வசித்துவந்த பொதுமக்களிடம் உதவி நாடினர்.
கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் முன்வராததால், பல மணி நேரமாக உடலை அடக்கம் செய்ய முடியாமல் சகோதரிகள் அழுது கொண்டிருந்தனர்.
உடனே அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தலைமை செயலக காலனி காவலருக்கு தகவல் தெரிவித்தார் .உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி மற்றும் சக காவலர்கள் உயிரிழந்த பிரபாவதி உடலை நல்லடக்கம் செய்வது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மாநகராட்சி அலுவலர்கள் ஒப்புதலுடன் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சக காவலர்கள் இணைந்து பிரபாவதி உடலுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கு, சம்பிரதாயங்கள் செய்தனர். பின்னர் பிரபாவதியின் உடலை மீட்டு ஓட்டேரி மயானத்திற்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.
கரோனாவால் அச்சமடைந்து ஒருவரும் முன்வராத நிலையில், பெண் காவல் ஆய்வாளர் முன்வந்து நல்லடக்கம் செய்ய உதவிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.