சென்னை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என 3 சிறப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 525 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு மரம் போன்ற விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
ஆனால் இதில் எதிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என சிறப்பு ஏற்பாடு இல்லை. அதை செய்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் முதல் முதலில் சாந்தோமில் 1.3 கோடி ரூபாயில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்கு என "உணர்வுப் பூங்கா" என்ற பெயரில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது.
![பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-park-disableperson-script-image-7209208_17052022173739_1705f_1652789259_710.jpg)
இது குறித்து சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், "2011 சென்சஸ் படி, 90,064 பேர் பல்வேறு மாற்றுதிறனோடு இருப்பதாகவும், அதில் 20 விழுக்காடு 14 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களை மகிழ்ச்சியாக வைப்பதற்கு இது போன்று பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த "உணர்வுப் பூங்கா" மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
![பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-park-disableperson-script-image-7209208_17052022173739_1705f_1652789259_678.jpg)
அதைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலும் 2 இடங்களில் இது போன்று பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு செய்து வளசரவாக்கத்தில் உள்ள சக்தி நகர் மற்றும் அடையாறு அருகே உள்ள கோட்டூர்புரத்தில் அந்த 2 பூங்காக்களை மாநகராட்சி அமைத்தது. இந்த 2 பூங்காக்களும் அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
பூங்காவின் சிறப்பு அம்சங்கள்:
நடைப்பயிற்சி: மூளை வளர்ச்சி / புற உலக சிந்தனை குன்றிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் திறமைகள் மேம்பட உதவுகிறது.
![பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-park-disableperson-script-image-7209208_17052022173739_1705f_1652789259_716.jpg)
முடிவில்லா நடைப்பயிற்சி: பாதசிகிச்சை நடைமுறை உள்ள இரு தரப்பு ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு நடைபயிற்சி திறன் மேம்பட பயன்படும்.
கூடை ஊஞ்சல்: பெருமூளை வாதம் குறைபாடு உள்ள குழந்தைகள் பயன் பெற இது உதவும்.
![பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-park-disableperson-script-image-7209208_17052022173739_1705f_1652789259_333.jpg)
மணலுடன் கூடிய பகுதி: சக்கர நாற்காலி பயன்படுத்தும் குழந்தைகள் சக நண்பர்களுடன் வெளியில் விளையாட உதவுகிறது.
சக்கர நாற்காலி ஊஞ்சல்: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சக்கர நாற்காலியுடன் ஊஞ்சலாடும் வசதி உள்ளது.
கூடைப்பந்து திடல்: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வழக்கமான முறையில் கூடைப்பந்து திடல் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
![பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-park-disableperson-script-image-7209208_17052022173739_1705f_1652789259_1034.jpg)
இசை ஒலி எழுப்பும் குழாய்கள்: ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.
குழாய் தொலைபேசி: பார்வை குறைபாடு மற்றும் சாதாரண குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
![பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-park-disableperson-script-image-7209208_17052022173739_1705f_1652789259_496.jpg)
அமைதி மண்டலம்: மரத்தின் நிழலில் மேஜை விளையாட்டுகளுடன் கூடிய இருக்கைகள் உடன் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது மற்றுமின்றி கூடை ஊஞ்சல், சக்கர நாற்காலி ஊஞ்சல் இருக்கும் பகுதியில் குழந்தைகள் கீழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்க செயற்கை பாய் (synthetic mat) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு வரும் குழந்தைகளுக்கு மாநகராட்சி சார்பில் தனியாக சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் சுற்றிபார்ப்பதற்கு என சிறப்பு குறியீடுகள் தரையில் அமைக்கப்பட்டுள்ளது.
![பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-park-disableperson-script-image-7209208_17052022173739_1705f_1652789259_241.jpg)
இந்த பூங்கா நன்றாக உள்ளது. ஆனால் மாநகராட்சி சரியாக பராமரிக்க வேண்டும் என அடையார் "உணர்வுப் பூங்கா" அருகில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து பூங்கா அருகே வசிக்கும் ஒருவர் பேசியபோது, "கடந்த ஆட்சியில் இதே பூங்கா மறுசீரமைக்கப்பட்டது. ஆனால் டெண்டர் எடுத்தவர் சரியாக பராமரிக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட 40 விளக்குகள் (Lights) பூங்கா சுற்றியும் அமைக்கப்பட்டது. கொஞ்ச நாள்களில் அந்த விளக்கில் இருக்கும் பல்புகளை கழட்டி யாரோ எடுத்து சென்று விட்டனர். இந்த முறையும் நன்றாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பராமரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து ஆய்வின் போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் கேட்டபொழுது, "நிரந்தரமாக ஒரு பாதுகாவலர் இங்கே இருப்பார். அவர் அனைத்து வகையான பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வார். மேலும் சிசிடிவி உள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த 3 பூங்காக்கள் போன்று புதிதாக பூங்கா அமைப்பதற்கு இடம் பார்த்து கொண்டு இருக்கிறோம். விரைவில் அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய புதிய பூங்கா அமைத்தாலும் அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.250 கோடி மதிப்புள்ள மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்த புத்தகம் - முதலமைச்சர் வெளியீடு!