தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2019-20 ம் கல்வியாண்டில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றிக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு மே மாதம் 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அப்போது கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு கலையியல் பிரிவின்படி சேர 14,526 பேரும், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டபடிப்பில் தொழிற்கல்வி பிரிவிற்கு 169 பேரும், பி.டெக் பட்டப்பட்டிப்பில் சேர்வதற்கு 2,427 பேரும் தகுதியின் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சேர்க்கைக்குழு தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. சிறப்பு பிரிவினர்களான விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 25ஆம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.
இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பில் தொழில்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 25ஆம் தேதி காலை 11.30 மணியளவில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கால்நடை இளநிலை மருத்துவ அறிவியல் படிப்பில் கலையியல் பிரிவிற்கு 26ஆம் தேதியும், பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு 27ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது" என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.