சென்னை: குன்றத்தூர், மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நித்யா தேவி (32), வேளச்சேரியில் உள்ள தனியார் டியூஷன் சென்டரில் வேலை செய்து வருகிறார். இதே குடியிருப்பில் ஆறு பேர் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தனர். வாகனங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.
இதில் நித்யா தேவியின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் லேசாக தீயில் சேதம் அடைந்தது.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக நித்யா தேவியின் வாகனங்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானதால் முன் விரோதம் காரணமாக வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது