சென்னை: வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தேர்தல்களில் ஊழல், கருப்பு பணத்தின் பங்கு இல்லாமல், ஜனநாயகத்தை நிலை நிறுத்த, தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டுவர கோரி தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சட்டத்துறைக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 75 ஏ படி, வேட்பாளர் வேட்புமனுவில், அவர் அந்த கட்சியில் சேரும்போது அவருடைய சொத்து விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பொருளாதார நிலை ஆகியவை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆறு மாதங்கள் சிறையுடன் அபராதம்
தேர்தல் விதிகளின்படி, அடிப்படையில் வேட்பாளர், அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் அசையும், அசையா சொத்து விவரங்கள், வங்கி இருப்பு மற்றும் நிதி நிறுவனங்களிலுள்ள கடன் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். தவறான விவரங்களை வேட்புமனுவில் தெரிவித்திருந்தால் ஆறு மாதங்கள் சிறையுடன் அபராதம் விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது.
வேட்பாளர்கள் போதிய தகவல்களை தராவிட்டாலோ? அல்லது தவறான தகவல்களைத் தந்தாலோ அதை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் செலவுகளை மாநில அரசுகளே ஏற்றுக்கொண்டு தணிக்கை மேற்கொள்ளும்பட்சத்தில் கருப்பு பணம் மற்றும் ஊழலைத் தடுக்க முடியும் எனவும், சாதி அரசியலை தடுக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
விசாரணை ஒத்திவைப்பு
வேட்பாளர் அவரது கட்சியில் சேரும்நாளில் அவரது சொத்துக்கள், நகை, வருமானம் என்ன, தற்போதுள்ள வருமானம், சொத்துக்கள் என்ன என்பதை வேட்பு மனுவில் தெரிவி்க்கும் வகையிலும், எந்த நோக்கத்துக்காக கட்சியில் சேருகிறார் என்பதையும் வேட்புமனுவில் தெரிவிக்கும் வகையில் தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, ஜெ. சத்யநாாயண பிரசாத் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: Sexual harassment: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கார் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை