தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காவல் துறைத் தலைவராக தற்போது ஜே.கே. திரிபாதி இருந்துவருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய காவல் துறைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் டெல்லி யுபிஎஸ்சி அலுவலகத்தில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள், தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ. இறையன்பு, உள் துறைச் செயலர் (கூடுதல் தலைமைச் செயலர்) பிரபாகர், காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இதற்காக வெ. இறையன்பு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் விமானம் மூலம் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
பணி மூப்பு அடிப்படையில் 1987 பிரிவு ஐபிஎஸ் அலுவலர்களான எம்.கே. ஜா, சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, பிரதிப் வி பிலிப், 1988ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராகப் பணியில் இணைந்த சஞ்சய் அரோரா ஆகியோரில் ஒருவர் காவல் துறைத் தலைவராக நியமிக்கப்படலாம்.
அதிலும், கரன் சின்ஹா, சைலேந்திரபாபு ஆகிய இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 29 Years Of Annamalai - மலைடா அண்ணாமலை!