மணப்பாறையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், “தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென விதிகள் உள்ளன. ஆனால் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வேளாண் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்யவில்லை.
கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஜனவரி 15இல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவில் குறிப்பிட்டுள்ள அலுவலர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைப் பதிவுசெய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள்!