சென்னை: சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்திலுள்ள ஆவின் பாலகம் எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அவர்கள், “தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர்.
முதலமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி!
மேலும், அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை அழைத்துப் பேசி நிறைவேற்ற வேண்டும் என்ற முழக்கங்களையும் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.