தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 27 ஆயிரத்து 256 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று மட்டும் சென்னையில் 1,072 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கான மண்டலங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பேரிடர் மேலாண்மை ஆணையர், முதன்மை செயலர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம்