சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில்,'காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்' என்று அறிவித்திருந்தார்.
காவலர் நலனுக்கு முக்கியத்துவம்
இதனை செயல்படுத்தும் விதமாக, இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 3) வெளியிட்டார்.

காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் பணி மேற்கொள்ள வழிவகுக்கும்.
இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை; வேதனையை போக்கிய ஸ்டாலின்