சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரைச் சேர்ந்த ஜமுனா என்பவர் பிரசவ வலி காரணமாக சென்னை மாம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் ஒப்பந்த செவிலியர் திவ்யா 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் உதவியுடன் கர்ப்பிணி ஜமுனாவுக்கு பிரசவம் பார்த்தாகக் கூறப்படுகிறது. இதில் ஜமுனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், ஜமுனாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. இதனையடுத்து ஆரணி மருத்துவமனைக்கு ஜமுனா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், அரசு மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால், அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்பட்டதால், உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு இழப்பீடாக தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாயை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கல்லூரி வருகைப் பதிவு வழக்கு: தேர்வெழுத அனுமதிப்பது முறையாக இருக்காது! நீதிமன்றம்.. - COLLEGE STUDENT ATTENDANCE CASE
மேலும், தமிழ்நாடு அரசுக்கு சில பரிந்துரைகளையும் மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அதன் உறுப்பினர் கண்ணதாசன் வழங்கினார். அதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும், தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பணி புரியும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிக்கடி தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், நல்ல பயிற்சி பெற்ற மருத்துவர்கள் 24 மணி நேரமும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த மருத்துவர் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை மாநில அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் வழங்கினார்.