சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடைபெற உள்ளது.
(செப்.7) ஆம் தேதி தொடங்கும் இப்பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நாளை மாலை 5:15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்படுகிறாா்.
இரவு 8 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து சேரும் அவருக்கு சென்னை காங்கிரஸ் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு இரவு சென்னையில் தங்கும் ராகுல் காந்தி, மறுநாள் (செப்.7) ஆம் தேதி புதன் கிழமை காலையில், ஸ்ரீபெரும்புதூர் ராஜுவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்பி காலை 11:40 மணியளவில் சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
ராகுல்காந்தி வருகையையொட்டி அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு பற்றிய சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று மதியம் சென்னை விமானநிலையத்தில் நடந்தது.
அதில் டில்லியிலிருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில உளவு பிரிவு அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராகுல்காந்தி வருகையையொட்டி நாளை பிற்பகலிலிருந்து சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதோடு முறையான அனுமதி பாஸ்கள் பெற்றவா்களை மட்டுமே விமானநிலையத்தில் ராகுல்காந்தியை வரவேற்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகலினை இனையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்...