கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி, வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் சி.ராஜசேகர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் ஏற்கனவே 75 விழுக்காட்டினர் மின் கட்டணம் செலுத்திவிட்ட நிலையில், ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் கோருவது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுவரை மின் கட்டணம் செலுத்தப்பட்டது தொடர்பான விவரம், இதில் அரசின் நிலைப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தவணைத் தொகை வசூலிக்க வந்த ஊழியரை முற்றுகையிட்ட மக்கள்