தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும், தகுதிவாய்ந்த உள்நாட்டு அகராதியியல் அறிஞர் ஒருவருக்கு, மொழிஞாயிறு
’தேவநேயப் பாவாணர் விருது’ வழங்கப்படவுள்ளது.
இதேபோல், வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கியும், தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த ஒருவருக்கு ’வீரமாமுனிவர் விருது’ வழங்கப்படவுள்ளது. இவ்விரு விருதுகளும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும். தகுதிவாய்ந்தவர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை.காம் (sorkuvai.com) வலைதளத்திலுள்ள அந்தந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி, வரும் 22ஆம் தேதிக்குள் ’இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், இரண்டாவது முதன்மைச் சாலை, தரமணி, சென்னை – 600 113’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் தங்கள் நாட்டைச் சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், அகராதியியல் வல்லுநர் ஒருவர் என இருவரின் பரிந்துரைச் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். பரிந்துரைப்பவர்களின் தன்விவரக் குறிப்பினையும், புகைப்படத்தையும் இணைத்தனுப்ப வேண்டும். விருதுகளுக்காகத் தேர்வு செய்யப்படும் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு இலட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்