இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், கிறிஸ்துவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களின் வாசலில் வண்ண நட்சத்திரங்களைக் கட்டி, கிறிஸ்துமஸ் மரம், இயேசுவின் பிறப்பை சித்திரிக்கும் குடில் அமைத்து, வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு கர்த்தரை வழிபட்டு உற்றார், உறவினர்களுடன் விருந்துண்டு, மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள்.
’வழி தவறிய ஆட்டை தேடிச்சென்று மீட்கும் மேய்ப்பன் போன்று, பாவம் என்னும் முள்ளிடையே நிற்கும் மனிதர்களையும் தேடிச்சென்று மீட்பது என்னுடைய பணி’ என்றுரைத்த இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.
அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த இந்த இனிய நாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைத்தோங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘கிறிஸ்துமஸ் குடிலிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு’ - தூத்துக்குடி தம்பதியின் புரட்சிகர குடில்!