State Human Rights Commission order: சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி மகேஸ்வரி, தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் ஆட்டோ ஓட்டுநர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மகேஸ்வரியின் புகார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்குப் பழிவாங்கும் வகையில், தனக்கு எதிராக அதே பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவரிடம் புகார் பெற்றும் பொய் வழக்குப் பதிவுசெய்ததாகக் கூறி, கொடுங்கையூர் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் வர்கீஸ் இக்னேஷ்யஸ் ராஜா, உதவி ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக பார்த்தசாரதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், மூன்று காவல் துறை அலுவலர்களும் உள்நோக்கத்துடன் பொய் வழக்குப் பதிவுசெய்து மனித உரிமை மீறப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு மூன்று லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரத்தில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று காவல் துறை அலுவலர்களிடமிருந்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்ட ஆணையம், மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்குப் பரிந்துரைத்தது.
இதையும் படிங்க: யானைகள் தண்டவாளம் பக்கம் வராமலிருக்க புதுத் திட்டம்