சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் காவல் துறையினரிடம் அதிகளவில் வந்து குவிகின்றன. இந்தக் குற்றங்களை கண்டறிவதற்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுடன் அதிநவீன சைபர் ஆய்வகம் ஒன்று சைபர் கிரைம் பிரிவில் செயல்படத் தொடங்கப்பட உள்ளது.
பொதுவாக குற்றவாளிகளின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் தேவைப்படும். இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஐந்தே நிமிடத்தில் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி தொடர்பான செல்போன் எண் அல்லது கணினியின் ஐபி முகவரி இருந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் முழு தொழிற்நுட்ப குற்றங்கள் குறித்த தகவலையும் பெரும்பலான தொழிற்நுட்பத்தை வைத்து சைபர் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரூ.5.6 கோடி மதிப்பில் உருவாகும் சைபர் கிரைம் அலுவலகம்
ஹாலிவுட் படங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ளதுபோல் மிகப் பெரிய திரையில் உயர் அலுவலர்கள் கண்காணித்து உடனடியாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் மிகப் பெரிய திரை மூலம் சைபர் குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 5.6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்படவுள்ள சைபர் கிரைம் ஆய்வகத்தில் ஐந்து மென்பொருள் நிபுணத்துவம் மிகுந்த பொறியாளர்கள் காவல் துறையினருக்கு உதவும் வண்ணம் சைபர் கிரைம் ஆய்வகத்தில் பணி அமர்த்தப்படவுள்ளனர்.
சைபர் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படவுள்ள புதிய தலைமுறை கணினியுடன், அதிநவீன சைபர் புரோ டூல்ஸ் சி5 கருவிகள் மூலம் கடந்த சில நாள்களாக இரண்டு மூன்று வழக்குகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சைபர் ஆய்வகத்துக்கு என தனியாக மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையர் பணி அமர்த்தப்படவுள்ளதாகவும் உயர் அலுவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோசடி கும்பலை பிடிக்க உதவும் தொழிற்நுட்பம்
குறிப்பாக சைபர் ஆய்வகத்தில் பயன்படுத்தவுள்ள அதிநவீன தொழிற்நுட்பத்தை சோதனை அடிப்படையாக பயன்படுத்தியதில் நடிகர் ஆர்யா போல் ஆன்லைனில் பேசி ஜெர்மன் பெண்ணை மோசடி செய்த இருவரை கைது செய்த வழக்கிலும், மேட்ரிமோனியில் மூலம் மோசடி செய்த நைஜீரிய கும்பலை கைது செய்த வழக்கிலும் , குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றவாளிகளின் செல்போனிலுள்ள தரவுகளை, செல்போனை பறிமுதல் செய்யாமலேயே அதிலுள்ள குறுஞ்செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை எடுக்கும் முறைகளும் இந்த தொழில்நுட்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அதிநவீன தொழிற்நுட்பத்தை திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா இல்லை!