சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அதை கைவிடக்கோரியும் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் 2020ஆம் ஆண்டு கரூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்த நேரம் என்பதால், செந்தில் பாலாஜி அதனை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கரூரில் மாவட்டத்தில் வசிக்கும் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனை, ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று (ஏப். 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை எதுவும் மீறவில்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மத்திய அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிரானதா? - கொந்தளித்த நயினார் நாகேந்திரன்