சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிந்த லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வருமானமின்றித் தவித்து வருவதும், பள்ளிகள் முழுவதுமாகக் கைவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசும் அவர்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் மிகுந்த வேதனையைத் தருகிறது.
கடந்தாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முழுச்சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல தனியார் பள்ளிகளோ ஐம்பது விழுக்காடு ஆசிரியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கும் மிகக்குறைவான ஊதியத்தையே வழங்கி வருகின்றன.
இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாத நிலையில் வேலையின்றி, வருமானத்திற்கு வேறு வாய்ப்பின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைகூட நிறைவேற்ற முடியாத இயலாமை காரணமாக மனஉளைச்சலுக்கு உள்ளாகி, வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடி வருகிறார்கள்.
ஆகவே, வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் உழலும் லட்சக்கணக்கான தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு தற்காலிகத் நிவாரண நிதியாக ரூபாய் பத்தாயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களுக்கு எவ்விதச் சலுகையும் காட்டாமல் முழுக்கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல முழுமையான சம்பளத்தையும் வழங்க முடியாவிடினும், குறைந்தப்பட்சமாக அவர்களது வாழ்வாதாரத்தைப் பேணுகிற வகையில் 50 விழுக்காடு ஊதியத்தையாவது தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டியது மிக அவசியமென்பதை உணர்ந்து, அதனைச் செயலாற்ற தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டுமென அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப் பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்களுக்கு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டுமெனவும், ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை 40இல் இருந்து 57ஆக மீண்டும் உயர்த்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறது!'- உயர் நீதிமன்றம் பாராட்டு