கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையம் பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் வழக்கறிஞர் வைரக்கண்ணன் மற்றும் திமுகவைச் சேர்ந்த மருதுகணேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமானவரித் துறை வழக்கறிஞர், அமைச்சர் விஜயபாஸ்கரின் 8 நிதி ஆண்டுகால வருமான வரி மதிப்பீட்டில் 4 ஆண்டு காலம் முடிவடைந்திருப்பதாகவும், மீதமுள்ள 4 நிதி ஆண்டு கால மதிப்பீட்டை முடிக்க மேலும் ஓராண்டு காலம் ஆகும் என தெரிவித்தார். அதேபோல, இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் சிபிஐயை இணைக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பணப்பட்டுவாடா புகார் குறித்து 828 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் பணப்பட்டுவாடா புகாரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என்றார். மேலும், வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமானவரித் துறை மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யவில்லை எனவும் அவர் வாதிட்டார்.
இதனையடுத்து திமுக வழக்கறிஞர் வில்சன், பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய தேர்தல் ஆணைய உத்தரவின் நிலை குறித்தும், தேர்தல் அலுவலர்கள் புதிய புகாரை அளிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். இந்தியத் தேர்தல் ஆணையம், வருமானவரித் துறையை சார்ந்து இருப்பது தவறு என்றும், வருமானவரித் துறை அறிக்கைக்காக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தையும் மோசடி செய்யும் செயல் எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இந்த வழக்கில் சிபிஐயை இணைக்க வருமானவரித் துறை மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தரப்பு எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்றும், அவருக்கும் இந்த வழக்கில் சம்பந்தம் இருக்கலாம் எனவும் வாதிட்டார்.
இதனையடுத்து, பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமலும், பிரதான வழக்கின் விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் உயர்மட்ட குழு அனுமதி எப்போது?