சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 15) காலை வழக்கு விசாரணையின்போது, கரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், கடந்த ஆண்டைவிட மோசமாக இருப்பதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கோரினார்.
தொடர்ந்து, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பிற்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ப. தனபால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
அதில், முக்கிய வழக்குகள், பிணை வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக முன்னிலையானால் போதுமானது எனவும், உயர் நீதிமன்றத்தின் மற்ற அனைத்து வழக்கு விசாரணைகளும் அடுத்தகட்ட அறிவிப்பு வரும்வரை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அறைகள், நூலகங்கள் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 17) முதல் மூடப்படும் எனவும் இந்த அறிவிப்பாணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதிவரை இந்த நடைமுறை தொடரும் எனவும், 22ஆம் தேதி கரோனா சூழல் குறித்து மீண்டும் ஆய்வுசெய்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு!