சென்னை: அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (68). இவர் அம்பத்தூர் எஸ்டேட் சர்வீஸ் சாலையில் உள்ள நடேசன் தெருவில் இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள வங்கியில் 2லட்சத்து 35ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பிந்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரது கவனத்தை திசை திருப்பி அவரது பணத்தை மூன்று பேர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்த சிசிடிவி காட்சிகளில், தாமஸ் தனது செல்போனுக்கு அழைப்பு வந்ததை அடுத்து இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து ஒரே வாகனத்தில் வந்த மூவரில் ஒருவன் பணம் கீழே கிடக்கிறது என கூறியுள்ளார்.
இதனை நம்பி தன் பணம்தான் என அவர் எடுக்கும் போது, அந்த நபர் இங்கும் பணம் சிதறி உள்ளது என சற்று மறைவான இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார்.
அதற்குள் அவர்களுடன் வந்த மற்றொரு நபர் தாமஸின் இருசக்கர வாகனத்தில் இருக்கைக்கு கீழிருந்து பணத்தை லாவகமாக திருடிக்கொண்டு தயாராக காத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விடுகிறார்.
இதனையடுத்து, தாம்ஸ் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் திருவள்ளுவர் தலைமையிலான காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகளவில் பணம் எடுத்து செல்லும் நபர்களை திசை திருப்பி பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் திருடர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை பொதுமக்களுக்கு இதுபோன்ற ஏமாற்று நபர்கள் குறித்து பலமுறை அறிவுறுத்தியும், மக்கள் அலட்சியமாக இருப்பதால் இழப்பு ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆரணியில் பட்டப்பகலில் செல்போன் கடையில் திருட்டு!