மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி, சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அதில், கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமயம்பாளையம், பண்ணிமடை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், செங்கல் சூளைகளையும் அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யும்படி தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது எப்படி? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!