சென்னை: போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை ஒன்றிய அரசு, கடந்த 2013ஆம் ஆண்டு அறிவித்தது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக் கூடிய தேர்வுகளில், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவதாகவும், உயர் நீதிமன்ற பணிக்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த தேர்வில் உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு அடுத்த வாரம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தவறான தகவலை பரப்பி மிரட்டல் - பிரபல மருத்துவர் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்