ரயில்களில் அதிக லக்கேஜ்களுடன் சென்றால் நாம் வண்டியைவிட்டு இறங்கியவுடன் நம்மை சுற்றிக்கொள்வார்கள் சிவப்புச் சட்டைக்காரர்கள். நமது பாவனைகளை வைத்தே லக்கேஜ்களைத் தூக்க நமக்கு உதவி தேவையா, இல்லையா என்பதை எளிதில் புரிந்துகொள்வார்கள்.
போர்ட்டர் என்றழைக்கப்படும் இந்த ரயில்வே கூலித் தொழிலாளர்கள் சரளமாக நான்கு, ஐந்து மொழிகளைப் பேசக்கூடியவர்கள். நாம் என்ன மொழி பேசுகிறோமோ, அதே மொழியில் நம்முடன் பேரம் பேசிக்கொண்டே நம்முடன் நடப்பார்கள், நாம் ஒப்புக்கொள்ளும் வரை!
ரயிலில் பயணிக்கும் அனைவரும் நிச்சயம் ஒரு முறையாவது அந்தச் சிவப்புச் சட்டைகளின் வேர்வையால் பயனடைந்திருப்பார்கள். ரயில் நிலையங்களில் ரயில்களுக்கு இணையாக துருதுருவென்று இருக்கும் அவர்களில் பலர், தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் மூன்று மாதங்களாகப் பொதுப்போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் இவ்வளவு காலம் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதில்லை.
இதனால் ரயில் நிலையங்களில் பணிபுரியும் போர்ட்டர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு மாதச் சம்பளம், சலுகைகள் என எதுவும் இவ்லை. இந்தக் கரோனா ஊரடங்கு இவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் ஆயிரம் போர்ட்டர்கள் உள்ளனர். மேலும் எழும்பூர் ரயில் நிலையத்தில் 300 பேரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் 30 பேரும் செங்கல்பட்டில் 10 பேரும் உள்ளனர். சாதாரண நாள்களில் இவர்களுக்குச் சராசரியாக 500 முதல் 1000 ரூபாய் வரை கூலியாகக் கிடைக்கும்.
போர்ட்டர்களைப் போலவே ஒப்பந்த ஊழியர்களும் இந்த ஊரடங்கால் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களை அனைவரும் ஒருங்கிணைத்து ஒரு பொதுப் பதிவேட்டை உருவாக்குவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வாக இருக்கும் என்கிறார் தட்சன் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனைச் சேர்ந்த ஜானகிராமன். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்திய ரயில்வேயில் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு லட்சம் வரை ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர்.