சென்னை: பெண்கள், குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். இதனால் அவரை கைது செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அதில், மதன் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர்களுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கையும், களவுமாக பிடிபட்ட மதன்
அதன் அடிப்படையில் மதன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
பின்னர் தலைமறைவாக இருந்த மதனை தர்மபுரியில் வைத்து ஜூன் 18ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவரை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி ஆஜரார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு
இந்நிலையில் மதன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சைதாப்பட்டை நீதிமன்றத்தில் ஜூன் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. அதனால் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
காவல் துறை பதிலளிக்க உத்தரவு
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "மதன் எந்த தவறும் செய்யவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட எந்த குற்றத்தையும் அவர் செய்யவில்லை.

கடந்த 13 நாள்களாக அவர் சிறையில் இருந்து வருகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜாமீன் மனு மீது காவல் துறையின் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து மனு தொடர்பாக காவல் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன் - திரண்ட இளைஞர் பட்டாளம்