மதுரை: ஜக்டோ ஜியோ அமைப்பினர் பணிப்புறகணிப்பு போராட்ட அறிவிப்பு தொடர்பாக, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜியோ ஜாக்டோ திருச்சியில் 04.02.2025 அன்று நடைபெற்ற தங்களது மாநில அளவிலான கூட்டத்தில் அனைத்து தாலூகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 ஆம் தேதி, பணிபுறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் இவ்வாறு பணிபுறக்கணிப்பு போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் எனக்கூறி, அப்போராட்டத்துக்கு தடை விதித்துள்ளன. இநத நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்போது பணிபுறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு சட்டவிரோதமானது.
இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அது அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பிரச்சனை. சாலை மறியல் நடைபெற்றால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், மருத்து தேவைகளுக்காக செல்பவர்கள், தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள், போராட்டத்தில் பங்குபெறாத ஊழியர்கள் என பல தரப்பினரும் பாதிப்பு அடைவார்கள்.
மேலும் சாலை மறியலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
ஸ்டிரைக் மற்றும் சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மீது கிரிமினல் சட்டங்களின் கீழ் வழக்குப்திவு செய்யவும், அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், உரிய விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்.' என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.' என்று 'அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.