தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், திமுக கூட்டணி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டதால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்தலை நடத்தக்கோரி அதிமுக, பாமக, சுயேச்சைகள் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்த ஸ்டாலின் என்பவர் தரப்பில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், வேட்புமனுக்களைப் பறித்துக் கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் போதிய காவல்துறை பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மார்ச் 10ஆம் தேதி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். ஆனால் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால், மார்ச் 11ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: குப்பைக் கிடங்கு சம்பந்தமான பிரச்சனை சரிசெய்யப்படும்: திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி