2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சியான திமுக, ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதேபோல் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் ராமசாமி கூறியதாவது:
மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. இதனால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல பிரிவினருக்கு மிக மோசமான நிலை ஏற்பட இருக்கிறது. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம். இந்தச் சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகத்தை தான் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய ஆட்சி இன்றைக்கு என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதேபோல் இந்தியாவில் யார் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அடுத்தப்படியாக பாரதிய ஜனதா கட்சியினர் மட்டும் இந்தியாவில் இருந்தால் போதும் என்று அவர்கள் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இது போன்ற அராஜக ஆட்சியை இந்தியாவிலிருந்து கூடிய விரைவிலேயே முற்றுப்புள்ளி வைப்பதற்கு பொதுமக்கள் தயாராகிவிட்டார்கள். நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை திருத்தி அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
முஸ்லீம் லீக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர் கூறியதாவது:
பாஜகவினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி மக்கள் மத்தியில் திணிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்தியா முழுவதும் பெருவாரியான மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தச் சட்டத்தை ஆதரித்துள்ள அதிமுகவை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்துள்ளோம்.
குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது.
எந்தெவாரு சட்டத்தை நிறைவேற்றினாலும் அது பாகுபாடு இல்லாமல் நிறைவேற்றப்படும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் திரும்பப்பெறும்வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்.
கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்ற வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை
அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வலைமை படுத்தவும், தமிழர்களின் உணர்வை ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.