சென்னை: கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.04.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.
புதிய தளர்வுகள்
- அனைத்து வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ, அதிகபட்சம் இரவு 10.00 மணி வரையிலோ பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
- இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும் அனைத்து காட்சிகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது.