சென்னை: நீட் தேர்வு நடந்து முடிந்த பின் 2020 அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓஎம்ஆர் விடைத்தாள்களை வெளியிட்டது.
இதில் 2020 அக்டோபர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248ஆகக் குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி, கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தன் கூகுள் கணக்கிலிருந்து மீட்டெடுத்த தரவுகள் மற்றும் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் 594 மதிப்பெண் எனக் காட்டிய புகைப்படங்களுடன் மாணவர் தரப்பில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி விசாரணை முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணைத் திரிக்க முடியும் என வாதத்திற்காகக் கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றார். தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது, இந்த வழக்கில், சைபர் குற்றங்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அலுவலர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு பிரிவை (Special investigation team) அமைக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆனால், அதற்கான அவசியம் ஏதும் இல்லை எனத் தெரிவித்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்கக் கோருவர் எனவும், தேசிய தகவலியல் மையம் (National informatics centre) இந்த விவகாரங்களில் கைதேர்ந்தது என்பதால், அவர்கள் இதனை விசாரிக்கட்டும் எனவும், அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால், இதில் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
தேசிய தேர்வு முகமை (National testing agency) சார்பில், குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்புப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும் இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை எனவும் வாதிட்டார்.
மேலும், ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் தாளின் திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதியவற்றை அழிக்கவோ முடியாதெனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும், கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சைபர் குற்ற நிபுணத்துவம் பெற்ற அலுவலர்களை நியமித்து விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், யார் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் ஆரம்பக்கட்ட விசாரணை மட்டும் மேற்கொண்டு, மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.