திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் சென்னை சைதாப்பேட்டை தொடர்வண்டி நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறுகையில், 'திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வழிகாட்டலின்படி சைதாப்பேட்டை தொடர்வண்டி நிலையத்தை இன்று காலை ஆய்வு செய்தோம். மேலும் நேரடியாக மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தோம்.
சைதாப்பேட்டை ரயில் நிலையம் பாரம்பரிய ரயில் நிலையமாகும். ஆனால் இங்கு அனைத்து ரயில்களும் நிற்காமல் செல்வது மக்களின் மிகப்பெரிய ஆதங்கம். எழும்பூர், தி.நகர் ரயில் நிலையங்கள் இருந்தாலும் சைதாப்பேட்டையிலிருந்து ஏராளமான மக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். அதனால் இங்கு அனைத்து தொடர்வண்டிகளும் நிற்கும்படி செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசுக்கு வைக்கின்ற முதல் கோரிக்கையாகும்.
மேலும் இந்த ரயில் நிலையத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்து, இந்த ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டோம். காலி இடங்களில் பூங்கா, சிசிடிவி கேமரா, எஸ்கலேட்டர், பாலூட்டும் அறை, கழிப்பறை வசதிகள் வேண்டும் எனப் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்படி மக்கள் தேவைகளைப் பட்டியலிட்டு, வருகின்ற 9ஆம் தேதி தென்னக ரயில்வே மேலாளரைச் சந்தித்துப் பேசி அதைக் கோரிக்கை மனுவாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் வழங்க உள்ளோம்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ' இந்தியா அளவில் எல்லாம் துறைகளிலும் பொருளாதார வீழ்ச்சி இருக்கும் நிலையில், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. ஒரு வீடு ஒழுகும் போது, அதைச் சரி செய்த பின்பு தான் சுண்ணாம்பு, வண்ணம் அடிக்க வேண்டும். எனவே முதலமைச்சர் முதலில் அடிப்படை பொருளாதாரத்தைச் சரி செய்ய மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்று கூறினார்.