தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக, 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும், அப்போதுதான் 11ஆம் வகுப்பில் சேரும்போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தை சேர்க்கை வழங்க முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை எனவும், தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அலுவலர்கள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பர் எனவும், எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து, அரசாணையை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.
அதேசமயம், 10ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியை கண்டறிய பள்ளிகள், தேர்வு நடத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: திறந்தவெளி கழிப்பிடமாக மாறுகிறதா அரசு மருத்துவமனை? நோயாளிகள் அவதி