சென்னை: முதுகலைக் கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டிலுள்ள ஆறு அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்) முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2021-22) விண்ணப்பங்களை அக்டோபர் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணமாக 60 ரூபாயும், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக இரண்டு ரூபாயும் செலுத்த வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விபரங்கள் ஆகியவற்றை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஆன்லைன் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 044-28260098 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம். விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.
மாணவர்கள் சேர்க்கை உதவி மையங்களில் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் இணையதளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.