சென்னை: முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, அறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று(26-4-2022) ஆஜரானார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள கோரப்பட்ட மனுவின் அடிப்படையில், வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மிக முக்கியமான வாக்குமூலம் அளித்துள்ளேன். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பிரிந்து இருந்த நேரத்தில், நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், ஏதாவது செய்ய வேண்டும் என இந்த ஆணையத்தினை அமைத்தார்கள். ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெவ்வேறு அணிகளாக செயல்பட்டு வந்தபோது மீண்டும் ஒன்றிணைவதற்காக ஒரு ஆணையம் அமைத்துள்ளனர்.
8 முறை சம்மன் அனுப்பிய பின்னர், ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாமல் இருந்தது, அவரது இறப்பிற்கு காரணம் என்று கூறியிருந்தார்.
குறிப்பாக இவர்களின் அலட்சியத்தின் காரணமாகவே ஜெயலலிதா இறந்துள்ளார். அதிமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் கைரேகை வைக்கவோ, கையெழுத்திடவோ முடியாது. அப்படியானால் அவரை கட்டாயம் ஆணையம் விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறேன். ஆணையம் என்ன முடிவு செய்கிறது என்பதை பார்க்கலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொஞ்சம் தீ பிடிக்காத பைக் வாங்கி கொடுங்க - சபாநாயகர் நகைச்சுவை பேச்சு