சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என போக்குவரத்து துறை முதன்மைச்செயலாளரும், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத் தலைவருமான கே. கோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை 5 வகையில் முதலீடு பெறப்படுகிறது. தற்பொழுது இந்நிறுவனத்தில் ஒரு வருட கால வைப்பு நிதிக்கு 7 விழுக்காடு வட்டியும், 2 வருட கால வைப்பு நிதிக்கு 7. 2 விழுக்காடு வட்டியும், 3 மற்றும் 4 வருட கால வைப்பு நிதிக்கு 7. 7 விழுக்காடு வட்டியும், 5 வருட கால வைப்பு நிதிக்கு 8 விழுக்காடு வட்டியும் வழங்கப்படுகின்றது.
மூத்த குடிமக்களுக்கு 0.25% முதல் 0.50% வரை வட்டி உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கு (58 வயது நிறைவடைந்தவர்கள்) 5 வருடங்களுக்கு கூட்டு வட்டியாக 10. 4 விழுக்காடு வட்டி அளிக்கப்படுகிறது. முறையான சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் வருமான வரி பிடித்தம் தவிர்க்கப்படும்.
ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டிக்கு வட்டி அளிப்பதனால் முதலீடு முதிர்வடையும் போது, நிகர வட்டி அதிகமாக கிடைக்கின்றது. இங்கு வைப்புத் தொகையை காசோலை மூலமாகவும், RTGS & NEFT மூலமாகவும் முதலீடு செய்யலாம். இந்நிறுவனத்தின் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள www.tdfc.in, தொலைபேசி எண் (044) 25333930 மற்றும் இணை மேலாண் இயக்குநர் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு துணைத்தேர்வு; வரும் 22ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்!