சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தை போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஐந்தாவது மண்டலத்தில் 5,523 விதிமீறல் கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும், அனைத்து மண்டலங்களிலும் சட்டவிரோத கட்டுமானங்களை அடையாளம் கண்டு, அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார். இதை ஏற்று வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்