சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS) மருத்துவப் பட்டப்படிப்புகளுக்காக விண்ணப்பிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெயிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள், மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் வரவேற்கப்பட்டன.
விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவுற இருந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி வரை தற்போது கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS) படிப்புக்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, பொது மற்றும் சிறப்பு விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்புப் பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு 'www.tnhealth.tn.gov.in' என்ற வலைதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் 07.12.2021 மாலை 05.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் 07.12.2021 மாலை 05.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதே போல அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாண்டு எம்.டி. (சித்தா) பட்ட மேற்படிப்பிற்கு சித்த மருத்துவத்திற்கான AIAPGET 2021 (SIDDHA)இல் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி முதல் முதல் வரவேற்கப்பட்டன.
அவற்றுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவுற இருந்த நிலையில் அதுவும் டிசம்பர் 7ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் மூத்த சகோதரர் மகள் லீலாவதி காலமானார்