கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடுகள் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 2017இல் நடைபெற்ற குரூப்-2(ஏ) தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றது குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் சார்பில் சிபிசிஐடி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் காவல் துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான சிவகங்கையைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மீது தற்போது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணையில் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் மற்றும் சித்தாண்டி ஆகியோர் கடந்த எட்டு ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதும் அவர்களின் மோசடிகள் மூலம் 100 கோடிகளுக்கும் மேல் தேர்வர்களிடம் வசூல் செய்துள்ளதாகவும் சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:'வில்சன் கொலை வழக்கு': தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு