சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் நலன் கருதி இந்த மாதத்துக்குள் வெளியிட வேண்டும் என்றும், தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த அவர், தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தமிழ்நாட்டில் கலந்தாய்விற்கான தேதிகளில் மாற்றம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறினார்.
மேலும், புதிய கல்விக்கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய இணை அமைச்சர் முருகன் கூறுவதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் நிலை புதிய கல்வி கொள்கையில் உள்ளதாகவும், எனவே தான் இரு மொழி கொள்கை போதும் என்று கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
நீட் தேர்விற்கான சட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் பரிசீலனையில் உள்ளதாக கூறுவது புதிய செய்தியாக உள்ளதாக கூறிய அவர், இது குறித்து முதலமைச்சர் விசாரிப்பார் என்றும் கூறினார்.
மாநில அரசு கொண்டுவரவுள்ள கல்வி கொள்கையை ஆளுநர் ஆதரிக்கவேண்டும் என கேட்டுகொண்ட அவர், இன ரீதியாக இல்லாமல் மொழி ரீதியாக எவ்வித வேறுபாடு இல்லாமல் இருப்பது திராவிட மாடல் என்று முதலமைச்சர் சொல்வதாகவும், மதவாதத்தை தூண்டக்கூடாது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழில் மொழிப்படம் கட்டாயமாக சொல்லி தருவதற்கு வலியுறுத்துவரா இணை அமைச்சர் முருகன் என்றார்.
இதையும் படிங்க: கோவையில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!