சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சுடர்மணி (34). மீனவரான இவர் கடந்த புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று கடற்கரையில் அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துரத்திச் செல்வதாக அங்குள்ளவர்கள் உறவினர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
உறவினர்கள் காசிமேடு கடற்கரைக்கு வந்து பார்த்தபோது முகத்திலும், வயிற்றுப் பகுதியிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் சுடர்மணி இறந்துகிடந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் துறையினர் கடற்கரையில் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா அல்லது கொலை நடந்த இடத்திற்கு அருகில் மதுபாட்டில்கள் இருந்ததால் குடிபோதையில் கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.